Sunday 5 June 2011

நல்வாழ்வு நம் கையில்


எங்களுடைய தாய், தந்தை, உடன் பிறந்த சகோதரர்கள், சகோதரிகள், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் அன்பு வேண்டுகோள்! நமக்கு எந்த நோய்களும் வரவேண்டாம் என்று விரும்புவோர் காபி, தேனீர், மீன், முட்டை, இறைச்சி வகைகள், பொடி, புகையிலை வகைகள், மது வகைகள், பெண் ஆசை, தீய எண்ணங்கள் ஆகியவற்றையும் தவிர்க்க வேண்டும்.
நமது உடல் வளர்ச்சிக்கு உணவு தேவை, அவை சரியாக செரிமானமாகவில்லை என்றால் அசீரணக் கோளாறு என்கிறோம். இதனால் உண்டாவது தான் வாதம், பித்தம், சிலேத்துமம் என்று நமது சித்தர்கள் கூறி உள்ளார்கள்.
  “ வாதம்” சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களிலிருந்தும் அதாவது குடல்வால், குடல்புண், குடலிறக்கம், குடல்பிதுக்கம் குடல் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களிலிருந்தும் மருந்து, மாத்திரைகள், உண்ணாமலும், அறுவை சிகிச்சை இல்லாமலும் வாழ வேண்டு மென்றால் ஆறு மாதத்திற்கு ஒருமுறை பேதி மருந்து சாப்பிட வேண்டும். தினமும் காலையும், மாலையும் கழிவுகளை வெளியேற்ற வேண்டும்.
  யோகா மருத்துவத்தில் வாந்தியம் ( வாமனதௌதி ) எனப்படும் கிரியைப் பயிற்சியை நாம் கடைப்பிடிப்பதால் ஆயுள் முழுவதும் “ பித்தம்” சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களிலிருந்தும் மருந்து, மாத்திரைகள் இல்லாமல் வாழலாம்.
  “ கபம்” சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களிலிருந்து அதாவது ஈஸ்னோபீலியா, ஆஸ்துமா, டி.பி. என்கிற காச நோய், சைனஸ் மற்றும் பலவிதமான சிலேத்துமம் ( சளி ) சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களிலிருந்தும் மருந்து, மாத்திரைகள் இல்லாமல் வாழ வேண்டும் என்றால், வாரம் இரண்டு முறை எண்ணெய் தேய்த்துத் குளிக்க வேண்டும். மேலும் மூச்சுப் பயிற்சியுடன் பிராணயாமம் என்கிற பயிற்சிகளைத் தொடர்ந்து செய்து வருபவர்களுக்குக் காற்றினால் ஏற்படும் அனைத்து நோய்களிலிருந்தும் முழுநலம் அடையமுடியும்.
மேற்கூறிய அசீரணத்தினால் உருவான வாதம், பித்தம், சிலேத்துமத்தைச் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சமாளித்துக் கொள்கிறார்கள். ஆனால் சமாளிக்க முடியாத ஒரு பிரச்சனை மலச்சிக்கலே. குழந்தைகள் முதல் மரணத் தருவாயில் வாழும் ஆண், பெண் அனைவருடைய அனைத்து நோய்களுக்கும் அடிப்படைக் காரணமாக இருப்பது மலச்சிக்கல், அதாவது “ காலையில் மலச்சிக்கலும், மாலையில் மனச்சிக்கலும் இல்லாமல் இருப்பது ஆரோக்கியமான நல்வாழ்க்கை” என்று நமது முன்னோர்கள் கடைப்பிடித்து வந்தார்கள்.
இந்த மலச்சிக்கல் நமக்குத் தினமும் ஏற்படாமல் வாழ ஒரு நாளைக்கு அல்லது ஒரு வேளைக்கு குறைந்தது 2 லிட்டர் முதல் 5 லிட்டர் வரை தண்ணீர் அருந்தினால் நமது உடலில் சூடு குறையும். இறுகிய மலம் இளகும், மலச்சிக்கலைச் சரி செய்ய மூல நோய் வராது. இதனால் மூலபௌத்திரம் நோய் வராமல் தடுக்கின்றது. அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்தியவர்களுக்கு 32 விதமான நோய்கள் சரிசெய்யப் படுகின்றன என்று 18 சித்தர்களும் கூறி இருக்கின்றார்கள்.
இவ்வாறு தினமும் கடைப் பிடிக்காதவர்கள் அனைவரும் நோயாளிகளே !
இதனால் நமக்குக் கஷ்டங்கள், கடன் தொல்லைகள், வாழ்க்கையில் வெறுப்பும், சலிப்பும் தோல்வியும், தனி மனித வாழ்வில் பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால் கவர்ச்சி, உயர்வு, தாழ்வு மனப்பான்மை வஞ்சம் ஆகியவை ஏற்படும்.
மேலும் நமக்கு வியாதிகள் இல்லாமல் வாழ நமக்குள் உருவாகி இருக்கின்ற நோய்கள் நலமடைய, கஷ்டங்கள், கடன் தொல்லைகள் அதிகரிக்காமல் இருக்கவும், சோதனையும், வேதனையும் குறைய விரும்புவோர்கள், “ வைகறை துயிலெழு” என்று முன்னோர்கள் அறிவுரையின்படி அதிகாலை அதாவது “ பிரம்ம முகூர்த்தம்” என்று அழைக்கும் 3 மணி முதல் 5 மணிக்குள் கட்டாயம் படுக்கையை விட்டு எழுந்து முகம், கைகள், கால்களைக் குளிர்ந்த நீரினால் சுத்தம் செய்து மலம், சிறுநீர் கட்டாயம் வெளியேற்ற வேண்டும்.
முகத்திற்கு மூச்சுப் பயிற்சியும், கை, கால்களுக்கு எளிய முறை உடற்பயிற்சியும், மனதிற்கு அகத்தவமும், உயிருக்குக் காயகல்பப்பயிற்சியும், ஜீவகாந்தப் பெருக்கத்திற்கு தீப பயிற்சியும், கண்ணாடி பயிற்சியும் செய்யவேண்டும். முடிந்தால் யோகாசனங்கள் செய்து உடல் மன நலகுறைகளைச் சரி செய்யப் பல்வேறு பயிற்சிகள் மூலம் மேற்கூறிய பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம். பொதுவாக நமது உடலுக்குக் குறைந்தது 6 மணி நேரம் மட்டும் ஓய்வு எடுத்தால் போதும். குழந்தைகளுக்கும், நோயாளிகளுக்கும் 8 மணிநேரம் வரை ஓய்வு எடுக்கலாம். தினமும் நாம் தூங்க இரவு 9:00 மணிமுதல் 10:00 மணிக்குள் கட்டாயம் ஓய்வு எடுக்க வேண்டும். ஏனென்றால் நல்ல, கனவுகள் இல்லாத, ஆழ்ந்த, கைகள், கால்கள், வலி இல்லாத நிம்மதியாகத் தூங்க வேண்டுமென்றால் தூங்குவதற்கு 2 மணிநேரம் முன்பு இரவு உணவு உண்ண வேண்டும்.
இவ்வகைச் செயல்களால் ஆயுள் முழுவதும் ஆரோக்கியமாக மருந்தில்லாமல் வாழலாம்.
திருவள்ளுவர் திருக்குறளில் பொருட்பாலில் 95 வது அதிகாரத்தில் மருந்து என்கிற பகுதியில் 948 குறளில்:
  “ நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
 வாய்நாடி வாய்ப்பச் செயல். ‘’
அதாவது, நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்குப் பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்.

கணக்குப் பாடத்திற்கு வாய்ப்பாடு எவ்வளவு கட்டாயமோ அதுபோல நாம் நோயின்றி வாழ உடலுக்கும் ஒரு வாய்ப்பாடு உண்டு.
  1.  ஒரு நாளைக்குக் காலை, மாலை இரண்டு முறை மலம் கழிக்க வேண்டும்.
  2.  வாரம் இரண்டு முறை எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும்.
  ( செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பெண்களுக்கு. ). ( புதன், சனிக்கிழமைகளில்   ஆண்களுக்கு )
  3. மாதம் இரண்டு முறை தாம்பத்திய உறவு ( விருப்பமுள்ளவர்களுக்கு மட்டும் )
  4. வருடம் இரண்டு முறை ( 6 மாதத்திற்கு ஒருமுறை ) பேதி மருந்து சாப்பிட     வேண்டும்.
“ பத்தியமா பக்குவமா ‘’
  ஒவ்வொரு பயிற்சியையும் தினமும் செய்வது நமது உடலைப் பக்குவபடுத்தும், ஆனால் தேவைப்படும் பொழுது செய்யப்படும் பயிற்சிகளே ( பத்தியம் ) மருத்துவமாகும்.
  “ வருமுன் காப்போம்” என்பது பக்குவம். வந்தபின் துன்புறுவதும், ஆபத்தைச் சந்திப்பதும், நிவாரணம் பெற விரும்புவதும், இன்றைய மனித சமுதாயத்தில் இயல்பு நிலையாக மாறிவிட்டது. ஆகவே,
 “இயற்கையை நேசிப்போம், இயற்கையும் நம்மை நேசிக்கும்.’’

No comments:

Post a Comment